Thursday, July 30, 2009

நீதியின் முன்

முந்தைய பதிவின் தொடச்சி...


(மேடையில் சர்று நேரம் அமைதி நிலவுகிறது. சன்னமான குரலில் அசரீரியாய் பாடல் ஒலிக்கிறது)

அசரீரி : ஆராரோ... ஆராரோ... ஆராரோ... ஆரீரரோ...
ஆராரோ... ஆராரோ... ஆரீரரோ... ஆரீரரோ...

உன்
பாட்டன் அடிச்ச பறை
ஓட்டை விழுந்துபோய்
ஓட்டை விழுந்த பறை
ஓட்டுமேலே காயுதய்யா !

வயோதிகன் : யார் அது.... யார் அது.... எங்களின் பழங்கதையை எங்களின் சொந்த ராகத்திலேயே பாடுவது யார். . . யார் . . .
(சுற்றும் முற்றும் தேடுகிறான்)

அசரீரி : பலமான சிரிப்புச் சத்தம் எதிரொலிக்கிறது) என்ன பெரியவரே ! வந்த வேலையை மறந்து சுகமான உறக்கமா?

வயோதிகன் : யார் நீ... யார் நீ... என் பரம்பரைக் கதையைப் பாடுகிறாயே... யார் நீ...

அசரீரி : நான் மூட்டைப் பூச்சி. உங்களால் நசுக்கப்படுவதற்கென்றே பிறந்த ஜீவன்களில் ஒன்று. இதோ உனக்குப் பக்கத்தில் தொங்குகிறதே வாயிற்காவலின் அங்கி அதிலிருந்துதான் பேசுகிறேன்.

வயோதிகன் : (அந்த அங்கியை எடுத்து புரட்டிப் பார்க்கிறான்) ஏ... மூட்டைப் பூச்சியே.. பிற உயிர்களின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் அற்பம் நீ. என்னை ஏளனம் செய்கிறாயா ?

அசரீரி : வாயிற்காவலனிடம் காட்ட முடியாத கோபத்தை என்மீது காட்டுகிறாயா ? (ஏளனமாகச் சிரித்தபடி) மனிதன் வெப்பப் பிராணிதான். தன் கோபமோ, கோரிக்கையோ மேலிடத்தில் செல்லாதபோது ! (ஏளன சிரிப்புச் சத்தம் உயர்ந்து அடங்குகிறது)

வயோதிகன் : என் நிலைமை உனக்கும்கூட ஏளனமாகத் தெரிகிறதா ? அது சரி.... என் பாடல் உனக்கு எப்படித் தெரியும் ?

அசரீரி : உனக்கும் வாயிற்காவலனுக்கும் சம்பாஷணைகளை தினம் தினம் கேட்டுக் கொண்டுதானே இருக்கிறேன். அவன் உன்னைத் திருப்பி அனுப்பும் போதெல்லாம் இந்தப் பாடலைத்தானே முணுமுணுத்துக் கொண்டு திரும்பி வருகிறாய்.

வயோதிகன் : நீதி என்பது நிச்சயம் எல்லோரும் எப்போதும் சென்று பார்க்கக்கூடிய ஒன்றுதானே ? ஆனால் எனக்கு மட்டும் எத்தனை சோதனைகள். நான் அதிர்ஷ்டமே இல்லாதவன். நீயாவது எனக்கு உதவக் கூடாதா? அந்த வாயிற் காவலனிடம் சிபாரிசு செய்யக் கூடாதா? அல்லது அவன் மனதையாவது மாற்றக்கூடாதா ?

அசரீரி : அதிர்ஷ்டத்தையும் சிபாரிசையும் நம்பி உங்களின் ஆணிவேரை இழந்து விட்டீர்களே. உன் வாழ் நாளில் இதுவரை எப்போதாவது, எங்கேயாவது எதிர்கேள்வி கேட்டதுண்டா ? எனக்கு இப்போதெல்லாம் மனித ரத்தம் ருசிப்பதில்லை. மனித ரத்தம் குளிர்ந்து போச்சு.

வயோதிகன் : அப்படியென்றால்.... மனிதன் இறந்துவிட்டானா ?

அசரீரி : இல்லை... எல்லா இடங்களிலும் கையேந்தியபடியே செத்துக் கொண்டிருக்கிறான்.

வயோதிகன் : ஏ.... மூட்டைப் பூச்சியே... நீ என்னைக் குழப்புகிறாய்.

அசரீரி : எப்போதெல்லம் உங்கள் மேலாடை கந்தலாகிறதோ, அப்போதெல்லாம் ஓடுகிறீர்கள் உங்கள் எஜமானர்களிடம், "இனியும் இது நீடிக்கக் கூடாது" என்று. வெற்றிகரமாக, மகிழ்ச்சியோடு திரும்பி வருகிறீர்கள், ஒரு துண்டு துணியோடு. நல்லது. துண்டு துணி சரிதான். ஆனால் முழு ஆடை எங்கே ? எப்போதெல்லாம் பசித்தீயால் கருகித் தீய்கிறீர்களோ, அப்போதெல்லாம் ஓடுகிறீர்கள் உங்கள் எஜமானர்களிடம், இனியும் இது நீடிக்கக் கூடாது" என்ற முடிவோடு. உற்சாகத்தோடு திரும்பி வருகிறீர்கள்; நாலு பருக்கைகளைப் பெற்றுக் கொண்டு. நல்லது, பருக்கைகளும் ஒருவகையில் சரிதான். ஆனால் முழு சாப்பாடு எங்கே ? எதிர் கேள்வி கேட்டதுண்டா ? உங்கள் இனத்தில் ரோஷமுள்ள ஒரு கவிஞன் கேட்டதைத்தான் நான் திருப்பிக் கேட்டேன். (ஏளனமான சிரிப்பு பலமாகக் கேட்கிறது) (சிரித்தவாறே) மனித ரத்தம் குளிர்ந்து போச்சு.
( சிரிப்பு தொடர்கிறது)

வயோதிகன் : போதும்.... போதும்... நிறுத்து....
(யோசித்தபடி அமர்கிறான். பின் மெல்ல எழுந்து முணுமுணுத்தபடி கோட்டை வாயிலை அடைகிறான். வாயிற்காவலனும் வயோதிகனும் சைகையினாலேயே விவாதத்தில் ஈடுபடுவது தெரிகிறது)

வாயிற்காவலன் : (சத்தமாக) ...... நிறுத்து ! என்ன வேண்டும் என்கிறாய் இப்போது ? உன்னை லேசில் திருப்திப்படுத்த முடியாது.

வயோதிகன் : எல்லோரும் நீதியைக் காணத்தான் போராடுகிறார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகளில் என்னைத்தவிர வெறு யாரும் இந்த வழியே உள்ளேபோக அனுமதி கேட்டு வரவில்லையே.

வாயிற்காவலன் : வேறு யாரையும் இங்கே அனுமதிக்க முடியாது (பலமாகச் சிரிக்கிறான்). ஏனென்றால் இந்த வாசல் உனக்காகவே செய்யப்பட்டது. உங்களுக்கு எல்லாமே காலம் கடந்துதான்...(சிரிப்பு) உனக்கான இந்தக் கதவு இதுநாள் வரை திறந்துதானே இருந்தது. உள்ளே எந்தப் பலசாலியும் இல்லை. உண்மையில் என்னைவிட நீதான் பெரிய பலசாலி. ஆனால்... உங்களுக்கு எல்லாமே காலம் கடந்துதான்.(சிரிப்பு). போ...போ... கதவை மூடப்போகிறேன்.

(அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு கதவைச் சாத்துகிறான்)

வயோதிகன் : ஏ... மூட்டைப் பூச்சியே... எங்கே போய்விட்டாய்.... இருக்கியா...

என்
நெஞ்சில் அடிச்ச பறை
நின் காதில் கேக்குதில்லே
சாவை அடவாக்கி
சதிராடி மகிழ்ந்திடுவாய்
(பாடலைப் பாடியவாறு கீழே வீழ்கிறான்)

- நிறைவு -

Tuesday, October 23, 2007

நீதியின் முன்

நீதியின் முன்
நவீன நாடகம்

ஃபிரான்ஸ் காஃப்காவின்
சிறுகதைத் தழுவல்

ஆக்கம் : மகரந்தன்


காட்சி : 1
இடம் : கோட்டை வாயிலின் முன்புறம்
நடிகர்கள் : 1, இளைஞன், 2. வாயிற்காவலன்

(கோட்டை வாயிலின் முன் உள்ள ஆராய்ச்சி மணியினை ஓங்கி ஓங்கி அடிக்கிறான் ஓர் இளைஞன். ஆராய்ச்சி மணியின் நாவு அறுந்து கீழே விழுகிறது. அதனோடு சேர்ந்து அவனும் விழுகிறான்)

இளைஞன்: ஓ. . . ஆராய்ச்சி மணியின் நாவும் அறுந்துவீழ்ந்து விட்டதே. இதுவரை யாரும் வரவில்லையே. அப்படியானால் நான் நீதியைத் தரிசிக்கவே முடியாதா?
(கோட்டையின் கதவு திறக்கப்படுகிறது) யாரோ வருவதுபோல் தெரிகிறதே. யார் அது? வாயிற் காவலனா?

வாயிற்காவலன்: (அதிகாரத் தோரணையில்) யார் நீ? என்ன வேண்டும்? எதற்காகக் கோட்டையின் தூக்கத்தைக் கெடுத்தாய்?

இளைஞன் : ஐயா! நான் கிராமத்தில் இருந்து வருகிறேன். இதுவரையில் சந்தித்தது எல்லாம் அநீதியைத்தான். என் வாழ்நாளில் ஒருமுறையாவது நீதியைத் தரிசிக்க வேண்டும் என்று ஆசை. அதனால்தான் இங்கு வந்தேன். என்னை அனுமதிக்க முடியுமா?

வா. காவலன்: (பலமாகச் சிரிக்கிறான்) நீதியைத் தரிசிப்பது என்பது அவ்வளவு சுலபம் என்றா நினைத்து வந்தாய்? (மேலே இரு கைகளையும் உயர்த்தி) கடவுளை நேரில் தரிசிப்பதற்கு ஒப்பானதல்லவா அது! சரி. . . சரி. . . பரிந்துரைக் கடிதம் ஏதேனும் கொண்டு வந்திருக்கிறாயா?

இளைஞன் : பரிந்துரைக் கடிதமா? அது எதற்கு? அப்படி ஏதும் என்னிடம் இல்லையே. ஆனால் என்னிடம் நேர்மை இருக்கிறது.

வா. காவலன் : நேர்மையா ! (ஏளனமாகச் சிரிக்கிறான்) இந்த தேசத்தில் மூச்சு விடுவதற்குக்கூட யாராவது முக்கிய நபர் பரிந்துரை செய்திருக்க வேண்டும். உனக்குத்தான் அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியவில்லையே. . . போ. . .போ. . . என் நேரத்தை வீணடிக்காதே.

இளைஞன் :
ஐயா ! தயவி செய்தை என்னை எப்படியாவது அனுமதியுங்கள்.
(கெஞ்சுகிறான். வாயிற்கதவின் உள்ளே எட்டிப் பார்க்கிறான்)

வா. காவலன் :
என்ன உள்ளே எட்டிப் பார்க்கிறாய்? (கிண்டலாகச் சிரித்தவாறே) அவ்வளவு ஆர்வமா? அவ்வளவு ஆர்வம் இருந்தால் என் தடையை மீறி உள்ளே போய்ப் பாரேன். ஆனால் ஒன்று. நான் பலசாலி. இத்தனைக்கும் வாயிற்காவலர்களில் கடைசி ஆள் நான்தான். உள்ளே ஒவ்வொரு கூடத்திற்கும் ஒரு வாயிற்காவலன் இருப்பான். ஒவ்வொருவனும் முன்னவனைவிட பலசாலியாக இருப்பான். மூன்றாவது வாயிற் காவலனே மிகப் பலசாலியானவன்; பயங்கரமானவன். அவன் முகத்தை நானேகூட ஏறிட்டுப் பார்த்ததில்லை. அவ்வளவு கொடியவன்.

இளைஞன் :
ஐயா ! உழைப்பைத் தவிர வேறொன்றும் அறியாதவன் நான். நீதியைத் தரிசிப்பதில் இவ்வளவு சிரமம் இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. ஆனால் வந்துவிட்டேன். (சற்று யோசிக்கிறான்) வழிப்பயணத்திற்காகக் கொண்டு வந்த பொருட்களையும் கையிலுள்ள பணத்தையும் தருகிறேன். வைத்துக் கொண்டு எப்படியாவது அனுமதி வாங்கித்தர முடியுமா?

வா. காவலன் : ம் . . . அது சாத்தியம் தான். ஆனால் இப்போது முடியாது. சரி. . . அந்தப் பொருட்களையும் பணத்தையும் இப்படிக்கொடு. ஆனால் ஒன்று. இதை நான் லஞ்சமாகப் பெற்றுக் கொள்வதாக நீ நினைத்துவிடக் கூடாது. நாம் எதையாவது செய்யாமல் விட்டுவிடோமோ என்று நினைத்து பின்னால் நீ வருந்தக் கூடாதே என்றுதான் இதை நான் வாங்கிக்கொள்கிறேன். அந்தப் பொருட்களை இப்படிக் கொடு. அங்கே உட்கார். அனுமதி வரும்வரை அதுதான் உனக்கு இடம்.

(அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் சென்று அமர்கிறான் அந்த இளைஞன். பின்னர், உட்கார்ந்த இடத்தில் இருந்தவாறே ஒரு பாடலைப் பாடுகிறான்)

இளைஞன்:
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ !
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ !
என்
பாட்டன் அடிச்ச பறை
ஓட்டை விழுந்து போய்
ஓட்டை விழுந்த பறை
ஓட்டு மேலே காயுதய்யா !

உட்கார்ந்தவாறே மெல்லத் திரும்பி கோட்டை வாயிலைப் பார்க்கிறான். எழுந்து வாயிலுக்குச் செல்கிறான்.

இளைஞன் : ஐயா. . . ஐயா. . .!

வா. காவலன் : ( உள்ளே இருந்து வந்து. . .) என்ன? என்ன வேண்டும்?

இளைஞன்: நான் உள்ளே போகலாமா?

வா. காவலன்: என்ன அவசரம்! அனுமதி வந்ததும் நானே சொல்கிறேன். போ. . . போய் உட்கார்.
(திரும்பி வந்து அமர்ந்து பாடலைத் தொடர்கிறான். . .)

என்
அப்பன் அடிச்ச பறை
அக்ககாய் கிழிந்துபோய்
அக்கக்காய் கிழிந்த பறை
ஆணியிலே தொங்குதய்யா!

(எழுந்து மீண்டும் கோட்டை வாயிலுக்கு விழைகிறான். தற்போது நடுத்தர வயதை அடைந்த தொற்றம்)

இளைஞன் : ஐயா . . . ஐயா . . .!

வா. காவலன் : (சலிப்புடன்) என்ன?

இளைஞன் : வயதாகிக் கொண்டே போகிறது. என் காலமே முட்ந்துவிடும்போல் இருக்கிறதே?

வா. காவலன் : வயதானால் என்ன? உனக்கான அனுமதி வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.

(மீண்டும் தனது பழைய இடத்திற்கே வருகிறான். வரும் போது நடையில் தளர்ச்சியும் தொற்றத்தில் முதுமையும் வெளிப்படுகிறது. வந்து அமர்ந்து விட்ட இடத்தில் இருந்து பாடலை மீண்டும் தொடர்கிறான்)

என்
அண்ணன்மார் அடிச்ச பறை
தோல் கிழிந்து கோவணமாய்
கோவணத் தோரணங்கள்
கூரையிலே காயுதய்யா !

(இம்முறை தலையை மட்டும் மெல்லத் திருப்பி வாயிற்கதவை பார்க்கிறான். முதுமை காரணமாக இழுந்திருக்க முடியவில்லை. தட்டுத்தடுமாறி எழுந்து வாயிற்கதவை நோக்கிப் போகிறான். வயோதிகத் தன்மை குரலிலும் தெரிகிறது)

வயோதிகன் : ஐயா. . வயதும் ஆகிவிட்டது. நீதியைத் தரிசிக்கவே முடியாதா?

வா. காவலன் : இனிமேலும்கூட அது சாத்தியம்தான். ஆனல் அது உன் சாமர்த்தியத்தைப் பொறுத்தது.

வயோதிகன் : ஒன்றும் புரியவில்லையே!

வா. காவலன்: எதுதான் புரிந்தது. போய் உட்கார். போ. . .போ. . . ( விரட்டுகிறான்)

(முணுமுணுத்தவாறு தள்ளாடி, தள்ளாடி நடந்து வந்து தனது பழைய இடத்தில் படுத்துவிடுகிறான்)

. . . . தொடரும்